தருமபுரி மாவட்டம், அரூர் அரசு மதுபான கடை அருகே வனப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தலை உள்ளிட்ட உடலின் பல்வேறு இடங்களில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்ட பொது மக்கள் அரூர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அரூர் காவல்துறையினர் வனப்பகுதியில் இறந்த உடலை ஆய்வு செய்தனர். அப்பொழுது இறந்து கிடந்தவரின் தலை, கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. முக்கியமாக தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் உறைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து விசாரணை செய்ததில், அரூர் பகுதியில் தினசரி நாளிதழ் விநியோகம் செய்து வந்த சண்முகம் என்பவர் அடையாளம் தெரிந்தது. பின்னர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த சண்முகம் அதிகப்படியான குடிப்பழக்கம் உடையவர் என்றும், மதுபோதையில் பாலத்தின் மீது இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்பது குறித்து பல்வேறு கோணத்தில் அரூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.