திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று, ஏற்கெனவே 36ஆக இருந்த நிலையில், நேற்று சென்னையிலிருந்து வாணியம்பாடி அடுத்த கோனாமேடு வந்த, உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கும், ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கும், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் அவர்களுடன் தொடர்புடைய 30க்கும் மேற்பட்டோரைத் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர், சுகாதாரத்துறையினர். மேலும் , வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதியில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கோனாமேடு, உதயேந்திரம், கடாம்பூர், சோலூர் ஆகியப் பகுதிகள் மற்றும் அந்தப் பகுதிகளுடன் தொடர்புடைய முக்கிய வழிப்பாதைகள், அனைத்தும் மூடப்பட்டன.
மேலும் அப்பகுதிகளில் உள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு பொதுமக்கள், யாரும் வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று சுகாதாரப் பணியாளர் யாருக்கேனும் காய்ச்சல், சளி உள்ளதா... என்பதைக் கண்டறிந்து கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.