சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (செப்.4) தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சென்னை பழ கமிஷன் ஏஜெண்டுகள் சங்கத்தலைவர் எஸ். சீனிவாசன், சங்க நிர்வாகிகள் ஆகியோர் நேரில் சந்தித்து கோயம்பேடு அண்ணா பழ அங்காடி வளாகத்தை விரைவில் திறக்குமாறு கேட்டுக்கொண்டு கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது, விருகம்பாக்கம் சட்டப் பேரவை உறுப்பினர் விருகை வி.என்.ரவி உடனிருந்தார். கரோனா தொற்று பரவல் காரணமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. இந்நிலையில் வணிகர் சங்கங்களின் கோரிக்கையை அடுத்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து, கோயம்பேடு மொத்த காய்கறி விற்பனை சந்தை, கனி, சிறு, மொத்த காய்கறி, மலர் அங்காடிகள் உள்ளிட்டவையும் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, மொத்த உணவு தானிய விற்பனை அங்காடி செப்டம்பர் 18ம் தேதி திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.