ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வருண்குமார், பொதுமக்கள் நேரடியாக தொடர்பு கொண்டு புகார் அளிப்பதற்காக 9489719722 என்ற சிறப்பு தொலைபேசி எண்ணை வெளியிட்டார். அந்த எண்ணை தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், ஏர்வாடி தர்கா போன்ற பல்வேறு பகுதிகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து, தகவல் தெரிவித்த மேற்கு மும்பை மலாட் பகுதியைச் சேர்ந்த ராஜா ஹரிஜான் என்பவரிடம் ராமநாதபுரம் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குவைத்தில் பணியாற்றி வருவதாகவும், அங்கிருந்து சமூக வலைதளங்கள் மூலமாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிறப்பு எண்ணிற்கு இதுபோன்ற தவறான தகவலை அளித்தது தெரியவந்தது.
இதையடுத்து, தவறான தகவலை தெரிவித்த அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏழு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 20 வயது இளைஞர் கைது!