களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் வனப்பகுதியிலிருந்து கரடி, காட்டுப்பன்றி, யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வெளியேறி விளைநிலங்களில் உள்ள பயிர்களை அழித்தும் வீட்டு விலங்குகளைக் கொன்றும் வந்தன.
மேலும் கடையம் வனச்சரகப் பகுதியான சிவசைலம், கருத்தப்பிள்ளையூர், அழகப்பபுரம் உள்ளிட்ட கிராமங்களில் கரடிகள் தொடர்ந்து ஊருக்குள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுவந்தன.
இது குறித்து வனத் துறையினருக்குத் தொடர்ந்துவந்த புகாரையடுத்து, வன விலங்குகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு நடமாட்டம் உள்ள இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் வைக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து நடமாட்டம் இருந்த இடங்களில் கரடியைப் பிடிக்க வனத் துறையினரால் கூண்டு வைக்கப்பட்டது. இதில் ஏப்ரல் 9, மே 31, ஜுன் 12 ஆகிய நாள்களில் மூன்று கரடிகள் பிடிபட்டன.
இந்நிலையில் தொடர்ந்து கரடி நடமாட்டம் இருந்ததையடுத்து ஆம்பூர் அருகே முதலியார்பட்டியில் உள்ள தனியார் தோட்டத்தில் கரடியைப் பிடிக்க புதிதாக ஒரு கூண்டு வைக்கப்பட்டது.
இதில் நேற்று இரவு, ஏழு வயது கரடி சிக்கியது. இதையடுத்து கூண்டில் சிக்கிய கரடியை வனத் துறையினர் முண்டந்துறை வனப்பகுதியில் கொண்டுவிட்டனர்.