புதுச்சேரி பூமியான்பேட்டையைச் சேர்ந்தவர் கொட்டா ரமேஷ். புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரத்னதேவியின் கணவரான இவர் மீது புதுச்சேரி-தமிழ்நாடு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இன்று காலை இவர் புதுச்சேரியிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில், அவரது நண்பர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோட்டகுப்பம் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு வீசி, இவரை கொல்ல துரத்திய போது, சின்ன கோட்டகுப்பம் வழியாக தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார்.
விடாமல் துரத்திய ஐந்துக்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத கும்பல், அவரை சின்ன கோட்டகுப்பம் பகுதியில் தடுத்து, சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர்.
தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கோட்டகுப்பம் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்டத் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெடிகுண்டு வீசி, ஒருவர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.