கள்ளக்குறிச்சி அருகேயுள்ள நிறைமதி கிராமம் குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம். இவர் சலவைத் தொழில் செய்து வருகிறார். கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு திருஞானசம்பந்தம் தியாகதுருகத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு மனைவி கீர்த்தனா, குழந்தைகள் ரிஷிகா (4), அமுதினி (2) ஆகியோரை அழைத்துச் சென்றுள்ளார்.
நேற்று இரவு அனைவரும் உணவருந்திய பின் உறங்கிவிட்ட நிலையில், அதிகாலை மூன்று மணி அளவில் கீர்த்தனா கண்விழித்து பார்த்தபோது தனது இரண்டு குழந்தைகளையும் காணவில்லை.
இதனால், அதிர்ச்சியடைந்த அவர் உறங்கிக் கொண்டிருந்த தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் இருவரும் அலறியடித்து பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.
ஆனால்,எங்கு தேடியும் குழந்தைகள் கிடைக்கவில்லை. பின்னர் தாய் கீர்த்தனாவின் அம்மா வள்ளியம்மை என்பவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரை அங்குள்ளவர்கள் அடித்து குழந்தைகள் எங்கே என்று கேட்டபோது, அவர் குழந்தைகளை தூக்கிச் சென்று உதயமாம்பட்டு செல்லும் சாலையில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் போட்டு விட்டதாகக் கூறியுள்ளார்.
உடனடியாக இதுகுறித்து தியாகதுருகம் காவல், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி மூழ்கிக்கிடந்த சிறுமிகளின் உடல்களை மீட்டு உடற்கூறாய்விற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக தியாகதுருகம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாட்டியே தனது பேரக் குழந்தைகளை கிணற்றில் தூக்கி எறிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குடும்பத் தகராறால் தற்கொலை முயற்சி: தாய் மீட்பு, குழந்தைகளை தேடும் பணி தீவிரம்