நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி) பாதிப்பு சில சமயங்களில் மூச்சுத் திணறலை ஏற்படுத்தக்கூடும். சரியான நேரத்தில் கவனிக்கத் தவறினால், கடுமையான நுரையீரல் பாதிப்புக்கு வழிவகுக்கும். இந்த பாதிப்பு மிகவும் பொதுவானது தான். ஆனால், இதுதொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது அவசியம். இதற்காக ஆண்டுதோறும் நவம்பர் 18ஆம் தேதி உலக நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோயின் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பு (WHO) கூற்றுப்படி, 65 மில்லியன் மக்கள் மிதமான முதல் கடுமையான நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோயால் (சிஓபிடி) பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் 2015ஆம் ஆண்டில் 3.17 மில்லியன் இறப்புகள் இந்த நோயால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நோயின் அறிகுறிகள் படிப்படியாக மோசமடைந்து, இறுதியில் மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கும். இதை முதலில் கண்டறியப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்து விளைவிக்க வாய்ப்புள்ளது.
நோய் அறிகுறிகள்:
மூச்சுத் திணறல்
நாள்பட்ட இருமல்
சோர்வு
சளி
காய்ச்சல்
நோய் பாதிப்புகள்:
நடைபயிற்சி அல்லது படிக்கட்டுகளில் ஏறுதல் குறையும்,
வேலை செய்ய முடியாமல் தவித்தல்,
சுவாசிக்க ஆக்ஸிஜன் சாதனம் தேவைப்படும்,
குழப்பம் அதிகரித்தல் அல்லது நியாபகம் இழப்பு,
கீல்வாதம், இதய செயலிழப்பு, நீரிழிவு நோய், கரோனரி இதய நோய், பக்கவாதம் அல்லது ஆஸ்துமா போன்ற பிற நோய்களை வழிவகுக்க வாய்ப்புள்ளது.
மனச்சோர்வு ஏற்படும்.
நோய் சிகிச்சை முறை:
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை காட்டிலும் சிலவற்றை கட்டாயமாக பின் தொடர வேண்டிய அவசியங்கள் உள்ளன. சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டும். நுரையீரல் பாதிப்பு தொடர்பாக அவ்வப்போது மருத்துவரை அணுக வேண்டும். புகையிலை தொடர்பான அனைத்து பொருள்களுக்கும் குட் பை சொல்ல வேண்டும்.
சிஓபிடி நோயாளிகளுக்கு சுவாச பயிற்சிகள்
அதிக காற்று உங்கள் நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் சென்றால் மட்டுமே உடல் சுறுசுறுப்பாக இருக்கும். மூக்கு வழியாக சுவாசிக்கவும், உங்கள் வாயின் வழியாக குறைந்தது இரண்டு முறை காற்றை வெளியிட வேண்டும். காற்றை வெளியிடும் போது உங்கள் வயிறு உள்ளே செல்வதை பார்த்திட முடியும். தினமும் 5-10 நிமிடங்கள் இவற்றைப் பயிற்சி செய்ய வேண்டும். காற்றோட்டமான, மரங்கள் இருக்குமிடத்தில் செய்வதால் ஆக்ஸிஜன் அதிகம் கிடைக்கும்.
மேலும், தற்போது COVID-19 தொற்றுநோயுடன் வாழ்ந்து வருவதால், சிஓபிடி நோயாளிகள் அதிக ஆபத்துள்ள குழுவின்கீழ் உள்ளார்கள். சிஓபிடி பாதிப்பு இருந்தால், பரிந்துரைக்கப்பட்டபடி மருந்துகளைப் பின்பற்றுங்கள்,
மருந்துகளை சேமித்து வைக்க வேண்டும்,
உங்கள் ஆக்ஸிஜன் சப்ளையரை சரிபாருங்கள்,
இன்ஹேலரை எளிதில் வைத்திருங்கள்,
முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள்.
அறிகுறிகள் மோசமடைவதாகத் தோன்றினால், உடனடியாக மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரை தொடர்பு கொள்வது நல்லது.