மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, டெல்லி முழுக்க கடந்த 15 நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் மத்திய அரசுக்குமிடையே பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மத்திய அரசு முன்வைத்த திருத்தங்களை ஏற்க விவசாய சங்கங்கள் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் என்று பாரதிய கிஸான் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் கூறுகையில், "மத்திய அரசு முன்மொழிந்த திட்டத்தில் இந்த சட்டங்களை திரும்பப் பெறுவது பற்றி குறிப்பிடப்படவில்லை.
அவர்கள் (மத்திய அரசு) சட்டத்தில் திருத்தம் செய்ய விரும்புகிறார்கள், ஆனால் இந்த சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே நாங்கள் நோக்கம். எங்களுக்கு சட்ட திருத்தங்கள் தேவையில்லை. மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும்.
குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து மத்திய அரசுக்கு எவ்வித கொள்கையும் இல்லை. இந்த மூன்று வேளாண் சட்டங்களை கொண்டுவந்தது போல, குறைந்தபட்ச ஆதரவு விலையையும் உறுதிப்படுத்தும் வகையில் மத்திய அரசு சட்டத்தை கொண்டுவர வேண்டும்.
நாங்கள் ஜியோவை புறக்கணிக்கவும் அழைப்பு விடுத்துள்ளோம். நாங்கள் பிஎஸ்என்எல் பயன்படுத்த விரும்புகிறோம். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 3ஜி, 4ஜி சேவையை அரசு கொண்டு வர வேண்டும். நீங்கள் மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்தாலே போதும்" என்றார்.
மேலும், மத்திய அரசு எப்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் விவசாயிகள் செல்ல தயாராகவுள்ளதாக குறிப்பிட்ட அவர், வரும் டிசம்பர் 14ஆம் தேதி வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பாஜக தேசிய தலைவர் வாகனத்தின் மீது கல்வீச்சு!