புதுச்சேரி: புதுச்சேரி கோரிமேட்டில், மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் அலுவல் ரீதியான பயன்பாட்டிற்கு இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அலுவல் ரீதியான பயன்பாட்டை முற்றிலும் இந்தியில் மாற்றுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கையை ஜிம்பர் இயக்குநர் பிறப்பித்துள்ளார்.
அதாவது மத்திய அரசு அலுவலகங்களின் பதிவேடு மற்றும் கோப்புகளில் இதுவரை இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் இனி வரும் காலத்தில் இந்தி மொழி மட்டுமே பயன்படுத்தப்படும் என்று ஜிப்மர் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜிப்மர் இயக்குநரின் இந்த உத்தரவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சி என்றும், இதனை அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக எம்.பி கனிமொழி, " மத்திய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? மத்திய அரசு திணிக்க முயலும் இந்தி, வேலையில்லா திண்டாட்டத்தைத் தீர்க்குமா? சமத்துவமின்மை மாறுமா? ஏதேனும் ஒரு சமூகப் பிரச்சனையையாவது திருத்துமா? விரிசல்களை ஆழப்படுத்துவது நல்லதில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.
இதையும் படிங்க: 'மூட்டுவலியால்தான் தேர்தலில் நிற்கவில்லை' - நாராயணசாமி பளிச்