பெங்களூரு: கர்நாடக மாநிலம் தாவனகேரே மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜீக், மிகவும் ஏழ்மை சூழலில் உள்ள குடும்பத்தைச் சார்ந்தவர். 6 பேர்கள் கொண்ட குடும்பத்தை, தந்தை ஒருவரே கவனித்துக்கொள்ள சிரமப்படுவதைக் கண்ட ராஜீக், மோட்டார் வேலைகள் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற ஆரம்பித்தார்.
இவ்வளவு கடினமான சூழலிலும் படிப்பை விடாத ராஜீக், தொடர்ந்து கல்லூரி படிப்பை படித்து வந்தார். இவர் தனது பட்டப்படிப்பான எம்.ஏ.ஆங்கிலத்தில் முதல் இடத்தைப் பிடித்தார். மேலும், இரண்டு தங்க மெடல்களும் வாங்கியுள்ளார்.
குக்கிராமத்தில் வசிக்கும் ராஜீக், தனது குடும்பத்தை சமாளிக்க வாரத்தில் மூன்று நாள்கள் கல்லூரிக்கும், மீதமுள்ள நாள்களில் தன் தந்தையுடன் மோட்டார் வேலைக்கும் சென்று விடுவார். அவர் படித்த தாவனகேரே பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறை, இவரது பட்டப்படிப்பிற்கு உதவியுள்ளது.
முன்னாள் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, ஹரிஹரா தாலுகாவிற்கு வருகை தந்த போது ராஜீக்கைப் பற்றி புகழ்ந்துள்ளார். இது குறித்து மாணவர் ராஜீக் உல்லா கூறுகையில், “நான் எனது கிராமம் மற்றும் அருகாமையில் உள்ள கிராமங்களில் மோட்டார் வேலைகள் செய்வேன்.
இத்துடன் சேர்த்து எம்.ஏ. ஆங்கிலப் பட்டப்படிப்பும் படித்து வந்தேன். எனது நண்பர்கள், பெற்றோர் நான் படிப்பதற்கு பெரிதும் உதவினர். நங்கள் மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். என் தந்தையின் கஷ்டத்தைக் கொஞ்சம் குறைக்கவே மோட்டார் வேலைகள் செய்துகொண்டே படித்தேன்” என்றார்.