நமது நாட்டின் மிகப்பெரிய பலம், வேற்றுமையில் ஒற்றுமை. பல்வேறு மொழிவாரி மாநிலங்கள் இருந்தாலும் அவை தங்களுக்கான அடையாளத்தை உறுதியாக பின்பற்றினாலும், தேசத்தின் நலனுக்காக அனைத்து மாநிலங்களும் ஒற்றுமை காத்து வருகின்றன.
மொழிவாரி மாநிலங்களின் எல்லைகளை வரையறுக்கும் போது, பல்வேறு மொழி இனக்குழுக்களை கொண்ட பகுதிகள் அருகாமையில் உள்ள மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன. மொழிவாரியாக இணைக்கப்பட்ட மாநிலங்களுடன் ஒத்துப்போகவில்லை என்றாலும், அந்தந்த மாநில நிர்வாகங்களின் படி மொழிவாரி சிறுபான்மையினர் ஆக கருதப்பட்டு அவர்களுக்கான சலுகைகள் அளிக்கப்பட்டு வந்தன.
ஆயினும் தற்போது வரலாறு திரும்பியது போன்ற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. முன்பு இருந்த மொழி வாரியான பகுதிகளுக்குள் ஏற்பட்ட பிணக்குகள், மீண்டும் ஏற்பட்டு ஒரே தேசம், ஒற்றுமையான இந்தியா என்ற கொள்கைக்கு குந்தகம் விளைவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மராத்தியர்கள் அதிகம் வசிப்பதால் பெலகாவி பகுதி, மகாராஷ்டிரா உடன் இணைக்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பீட் செய்த விவகாரம், பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த நிலைப்பாடு கர்நாடகாவில் கொந்தளிப்பையும் உருவாக்க தவறவில்லை. கர்நாடகாவின் ஒரு மாவட்டமாக இணைந்திருக்கும் பெலகாவியில் செயல்படும் மகாராஷ்டிரா ஏக்கி காரன் சமிதி அமைப்பினர் கிளப்பி வரும் சர்ச்சைகளால், கர்நாடகாவில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டத்தை தங்கள் வசம் உறுதியாக பிடித்து வைத்துக்கொள்ள, கர்நாடகாவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறவில்லை.
அங்கு இரண்டாவது சட்டசபை கட்டிடத்தை எழுப்பவும், மிக முக்கிய நகரமாக பெலகாவியை மாற்றவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி தேர்தலில் மகாராஷ்ட்ரா ஏக்கிகாரன் சமிதி கட்சியினருக்கும் கன்னட அமைப்பினருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், உத்தவ் தாக்கரேயின் நிலைப்பாடு பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது. இவரது ட்வீட் வெளிவந்ததை அடுத்து, சிவசேனா கட்சியினர் பெலகாவியில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அம்மாவட்டத்தை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று போராட தொடங்கிவிட்டனர்.
மொழி ஆதிக்கம் மற்றும் ஹிந்துத்துவா கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளதால், சிவசேனா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதோடு, போராட்ட களத்தில் எப்போதும் ஆக்ரோஷமாக இறங்கும். கர்நாடகாவும் இந்த விஷயத்தில் எந்த அளவிலும் குறைந்த மாநிலம் அல்ல. இனப்பற்றும் மொழிப்பற்றும் அதிகம் கொண்ட அதிக அளவிலான அமைப்புகள், அங்கு வீரியத்துடன் செயல்பட்டு வருகின்றன. மொழிவாரி கொள்கையில் உறுதியுடன் இருக்கும் இந்த இரு மாநிலங்களும், ஒரு மாவட்டத்தை தங்களுக்கு சொந்தம் என உரிமை கொண்டாடுவதால் பல்வேறு கலவரங்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.