ஸ்ரீநகர்: சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்துவருகின்றனர். தங்களது நண்பர்களையும், ஆசிரியர்களையும் நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. பிறகு அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன, இணையம் முடக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், கரோனா தொற்றினால் அவை மீண்டும் மூடப்பட்டன.
காஷ்மீரில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உலகில் எங்கும் இல்லாத வகையில், கடுமையானதாகவும், நீண்டதாகவும் இருந்தது என காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் இயங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முகக்கவசங்கள் அணியாத மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிப்பதில்லை எனவும், முறையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பள்ளி வளாகத்தில் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வித்துறை அலுவலர்கள் கூறுகின்றனர்.
தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகள் மார்ச் 8ஆம் தேதி முதல் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: காஷ்மீரின் கைவினைக்கலையை 68 வயதிலும் பேணிகாக்கும் குலாம் நபி தார்