டெல்லி: கரோனாவுக்கு எதிராக போராடி வரும் அலோபதி மருத்துவர்களுக்கு எதிராக பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்தது தொடர்பாக, நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
பாபா ராம்தேவ் தனது பதஞ்சலி தயாரிப்புகளான கரோனில், ஸ்வாசரி வதி, அனு தனிலா ஆகியவற்றை விற்பனை செய்ய, ஒன்றிய அரசு அங்கீகரித்த அலோபதி மருத்துவ முறை குறித்து பொய்யான செய்திகளை பரப்புவதாக டெல்லி மருத்துவ சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அலோபதி முறை குறித்து பொய்யான தகவலை பரப்பி, தனது கரோனில் தயாரிப்பின் மூலம் ராம்தேவ் இதுவரை 1,000 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டியிருப்பதாக கூறியுள்ளனர். ஐசிஎம்ஆர், எய்ம்ஸ் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் மீது ராம்தேவ் அவதூறு பரப்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன் அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.