Basava Jayanthi: பசவண்ணாவின் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை! - ராகுல்காந்தி
பசவ ஜெயந்தியையொட்டி, கர்நாடக மாநிலம், பாகல்கோட்டில் உள்ள பசவரின் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு மதிய உணவு சாப்பிட்டார்.

பாகல்கோட்: கர்நாடகாவில் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான பசவண்ணாவின் பிறந்தநாள் விழா இன்று(ஏப்.23) கொண்டாடப்படுகிறது. பசவ ஜெயந்தியையொட்டி, கர்நாடக மாநிலம், பாகல்கோட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், இரண்டு நாட்கள் பயணமாக கர்நாடகா வந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, இன்று பசவரின் நினைவிடத்திற்குச் சென்றார். பசவண்ணா நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்குள்ள சுயம்பு லிங்கத்திற்கு பூஜைகளையும் செய்து வழிபட்டார்.
பிறகு, பசவேஸ்வரரின் நினைவிடத்தில் வழங்கப்பட்ட மதிய உணவையும் சாப்பிட்டார். இதில், ராகுல் காந்தியுடன் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பசவருக்கு மரியாதை செலுத்தினர்.
பசவண்ணா கர்நாடகா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு சமூக சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். பசவண்ணா தீவிர சிவபக்தர் என்று நம்பப்படுகிறது. இதனால், அவரது ஐக்ய மண்டபமான நினைவிடத்தில் அவரை பின்தொடர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், சிவபக்தர்களும் தரிசனம் செய்கிறார்கள். பெரும்பாலும் லிங்காயத்துகள் இவரைப் பின்பற்றுகின்றனர்.
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆட்சியை தீர்மானிக்கும் லிங்காயத் சமூகத்தினரின் வாக்குகளை பெறுவதற்கு காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: PM Modi : ரத்தாகிறதா பிரதமர் மோடியின் கேரளா பயணம்? உளவுத் துறை கூறுவது என்ன?