எர்ணாகுளம்: கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாளப் பட இயக்குநர் சணல் குமார் சசிதரன் அவரது சமூக வலைதளப்பக்கத்தில், 'அசுரன்' படப்புகழ் நடிகை மஞ்சு வாரியர் கடத்தப்பட்டதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் சர்ச்சையான பதிவுகளைப் பதிவிட்டார். கடந்த சில நாட்களாக அந்தப் பதிவுகள் மிகவும் வைரலாகிக் கொண்டிருந்தன.இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியரை சமூக வலைதளங்களில் மிரட்டியதாக இயக்குநர் சணல்குமார் சசிதரன் இன்று கேரள போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, அவதூறாகப் பேசி மிரட்டியதாக மஞ்சு வாரியர் அவர் மீது புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் மஞ்சு வாரியர் வாக்குமூலத்தைப் பதிவு செய்த எலமக்கரை போலீசார் சணல் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் திருவனந்தபுரம் பாறசாலை மகாதேவர் கோவில் அருகே சணல் குமார் இன்று காலை கைது செய்யப்பட்டார். சட்டப்படி சமூக வலைதளங்கள் மூலம் அவதூறு செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணையை தொடர முடிவு செய்ததாகக் கூறியுள்ளனர். இதனையடுத்து மலையாளத் திரையுலகில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.
சணல் குமார் சசிதரன் 2015ஆம் ஆண்டு இயக்கிய 'ஒழிவுதிவசத்தே களி' என்னும் சுயாதீன மலையாளப்படம் தமிழ் கலை- இலக்கிய ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மதக் கலவரத்தைத் தூண்ட முயன்ற புகார்: சூர்யா, ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு