இந்தியாவின் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நலக் குறைவால் இன்று (பிப்.6 ) காலமானார். கடந்த சில நாள்களுக்கு முன் கரோனா தொற்றால் லதா மங்கேஷ்கர் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சீரான உடல் நிலை இருந்த போதிலும் வயது முதிர்வு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக உடல் நிலை மோசமடந்ததை அடுத்து இன்று மும்பையில் உள்ள பிரிச் கேண்டி மருத்துவமனையில் காலமானார்.
பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
லதா மங்கேஷ்கர் இறப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “நான் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு வேதனையடைந்துள்ளேன். அன்பான மற்றும் அக்கறையுள்ள லதா திதி நம்மை விட்டுப் பிரிந்தார். நம் நாட்டில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை அவர் விட்டுச் செல்கிறார். அவரை இனிவரும் தலைமுறையினர் இந்தியக் கலாசாரத்தின் தலைசிறந்த வீராங்கனையாக நினைவு கூறுவார்கள், அவரது மெல்லிசை குரல் மக்களை மயக்கும் இணையற்ற திறனைக் கொண்டிருந்தது”. எனத் தெரிவித்துள்ளார்.
“மரியாதைக்குரிய லதா அவர்களின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ஏற்பட்ட வேதனை போலவே எனது இதயத்தையும் உடைத்துள்ளது. அவரது எண்ணிலடங்கா பாடல்களினால் இந்தியாவின் சாராம்சத்தையும் அழகையும் வழங்கினார், அடுத்த தலைமுறைகள் தங்கள் உள்ளத்தின் உணர்ச்சிகளை அவரது பாடல்கள்மூலம் வெளிப்படுத்தினர். லதா அவர்களின் சாதனைகளை ஒப்பிட ஒரு பாரத ரத்னா போதாது” எனத் தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தி இரங்கல்
ராகுலின் ட்விட்டர் பக்கத்தில், “லதா மங்கேஷ்கர் மறைந்த சோக செய்தி கிடைத்தது. பல காலங்களாக இந்தியாவின் மிகவும் பிரியமான குரலாக இருந்தார். அவரது தங்கக் குரல் அழியாதது மற்றும் அவரது ரசிகர்களின் இதயங்களில் தொடர்ந்து எதிரொலிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.
நிதின் கட்கரி இரங்கல்
மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மும்பை மருத்துவமனைக்கு சென்று லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினரை சந்தித்தார். மேலும் லதா மங்கேஷ்கரின் இறுதி தரிசனத்தை கண்டேன் என உருக்கமாக தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இரங்கல்
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, “லதா மங்கேஷ்கர் அவர்களின் உடல் மட்டுமே பிரிந்துள்ளது. உயிர் என்றும் அழியாது” எனக் கூறி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:இந்தியாவின் ஒரே 'நைட்டிங் கேல்' லதா மங்கேஷ்கர்