நாட்டு மக்களுக்கு, தங்கள் வீட்டுக்கு அருகிலேயே ஆரம்ப சுகாதார சேவைகள் கிடைப்பதற்காக, ஆயஷ்மான் பாரத் திட்டம் கடந்த 2018இல் தொடங்கப்பட்டது. சுகாதார நல மையங்கள் மற்றும் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் ஆகியவை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் இரு தூண்களாக செயல்படுகின்றன. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இதன் மூலம் மகப்பேறு, குழந்தைகள் நலன், ஊட்டச்சத்து, தொற்று நோய் கட்டுப்பாடு ஆகிய சேவைகள் மக்களுக்கு கிடைக்கிறது.
கிடைத்த தகவலின்படி, தற்போது நாடு முழுவதும் 678 மாவட்டங்களில் தற்போது 50,025 சுகாதார நல மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் 27,890 துணை சுகாதார மையங்கள், 18,536 ஆரம்ப சுகாதார மையங்கள், 3,599 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களாகும். இங்கு மொத்தம் 28 கோடியே 10 லட்சம் பேர் சிகிச்சைக்கு வந்துள்ளனர்.
இவர்களில் 53 விழுக்காடு பெண்கள் ஆவர். 6.43 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்தப் பரிசோதனையும், 5.23 கோடிப் பேருக்கு நீரிழிவு பரிசோதனையும், 6.14 கோடி பேருக்கு புற்றுநோய் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடி பேர் உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்காகவும், 60 லட்சம் பேர் நீரிழிவு நோய்க்கும் இலவசமாக மருந்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தத் திட்டத்தின் மூலம் 50 ஆயிரத்துக்கும் மேலான ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நல மையங்களை செயல்பாட்டில் வைத்திருக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த சாதனையானது திட்டமிடல், அனைத்து துறையும் கவனித்தல், செயல்முறை தரப்படுத்தல் போன்றவற்றை ஆராய்வதில் மத்திய, மாநில அரசுகள் கூட்டாக பணியாற்றியது தான்தான் காரணம் எனக் கூறப்படுகிறது.