தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பரப்புரை மேற்கொண்டுவருகின்றன. இதற்கிடையே, திமுகவின் மூத்தத் தலைவரான ஏ.வ. வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் நேற்றும் (மார்ச் 25), இன்றும் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் திமுக வேட்பாளர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு வேண்டுமென்றே கட்சியின் நிர்வாகிகள் அலுவலங்களில் வருமான வரி சோதனை நடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் புகார் மனு ஒன்றை அளித்தார்.
இந்த மனு மீது விரைவில் விசாரணை நடக்கும் எனத் தேர்தல் ஆணையம் உறுதி அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாதாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று திருவண்ணாமலையில் பரப்புரை மேற்கொண்டார். அப்போதுதான், அந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் எ.வ. வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் திடீரென வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
அதுமட்டுமின்றி, மதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் பிரமுகர்களின் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது.