புதுச்சேரியில் இதுவரை நான்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் பேரவையில் ஆளும் காங்கிரஸ் 14 இடங்கள், எதிர்கட்சி 14 இடங்கள் என இரண்டும் சம பலத்தில் உள்ளன. இதனால் அறுதி பெரும்பான்மைக்குத் தேவையான 16 இடங்களுக்கும் குறைவாக காங்கிரஸ் இருப்பதால் ஆட்சியில் நீடிப்பதில் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று புதுச்சேரி சட்டபேரவை வளாகத்தில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கூறிய அவர், "புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. நான்கு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். இதனால் முதலமைச்சர் நாராயணசாமி தார்மீக பொறுபேற்று தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பகிரங்கமாக தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், ஆட்சி அமைக்க உரிமை கோருவீர்களா? என்ற கேள்வி எழுப்பியதற்கு, "முதலில் அவர்கள் பதவி விலகட்டும். பின்னர் அது குறித்து முடிவு எடுக்கப்படும்" என பதிலளித்தார்.
அப்போது அவருடன் அதிமுக, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் உடன் இருந்தனர். இதற்கிடையே முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இதையும் படிங்க; புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர் ராஜினாமா: சட்டப்பேரவை கலைகிறதா?