டெல்லி: நெடுஞ்சாலை திட்டப் பணிகளில், ட்ரோன்கள் மூலமான படப்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒப்பந்ததாரர்கள், கடந்த மாதம் மற்றும் தற்போது நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகளை மேற்பார்வை ஆலோசகரின் குழுத் தலைவர் முன்னிலையில் 'ட்ரோன்' மூலம் வீடியோ எடுத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய இணையதளத்தின் ‘டேட்டா லேக்’-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேற்பார்வை ஆலோசகர்கள் இதை ஆய்வு செய்து தங்கள் கருத்துக்களை, டிஜிட்டல் மாதாந்திர அறிக்கையில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வீடியோக்களை நெடுஞ்சாலை திட்டத்தின் நேரடி ஆய்வின் போது, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்களும் பார்த்து குறைகள் இருக்கிறதா எனச் சரிபார்ப்பர்.
இந்த வீடியோக்கள் ‘டேட்டா லேக்-ல் நிரந்தரமாக சேமிக்கப்படும் என்பதால், நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்போது, இந்த வீடியோவை ஆதாரமாகப் பயன்படுத்த முடியும். இது தவிர, தேசிய நெடுஞ்சாலைகளின் தரத்தை மேம்படுத்த, நெட்வொர்க் சர்வே வாகனம் (Network Survey Vehicle) மூலம், சாலையின் நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்படும்.
இந்த என்எஸ்வி வாகனத்தில், அதிக திறன் வாய்ந்த டிஜிட்டல் கேமிரா, லேசர் சாலை ஃபுரோபிலோ மீட்டர் உட்பட சாலைகளின் மேற்பரப்பை அளவிடுவதற்கான நவீன தொழில்நுட்பங்கள் உள்ளன.
இதையும் படிக்கலாமே: முன்களப் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி: ஜூன் 18ஆம் தேதி பிரதமர் தொடங்கிவைப்பு!