மத்தியப் பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் சுவாரசியங்களுக்கு பஞ்சமில்லாமல் பல வினோத நிகழ்வுகள் நடந்தன. தற்போது அந்த வரிசையில் ஹர்தா மாவட்டத்தில் உள்ள ஹண்டியா கிராம பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட லகான் லால் பிலாலா என்பவர் அவரது பதவியை மற்றொருவருக்கு 50 ரூபாய் ஸ்டாம்ப் பத்திரத்தில் எழுதி கொடுத்துள்ளார்.
இது அம்மாநில உள்ளாட்சித் தேர்தல் சட்டத்திற்கு புறம்பானது. இது குறித்து பதிலளித்த பிலாலா தரப்பு, ‘ பிலாலாவிற்கு படிப்பறிவின்மை இல்லாததால் இந்த பதவியில் முறையாக பணியாற்ற முடியாது எனவும், அவரது குடும்ப உறுப்பினர்களும் படிப்பறிவில்லாதவர்கள் என்றும், இச்செயல் சட்டத்துக்கு எதிரானதாக இருந்தாலும், பஞ்சாயத்துத் தலைவராக தனது கடமைகளை நிறைவேற்றத் தேவையான அனைத்து ஆவணங்கள் மூலம் அவருக்கு வழிகாட்ட ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக சித்தாந்த் திவாரி என்பவரை அவரது பிரதிநிதியாக நியமித்துள்ளார். சிந்தாந்த் மீது பிலாலாவிற்கு அதிக நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பிலாலாவின் படிப்பறிவின்மையை பயன்படுத்தி யாரேனும் அவரை ஏமாற்றி விடக்கூடும் என அவரது குடும்பத்தார் அஞ்சுகின்றனர்.
இது குறித்து பதிலளித்த மாவட்ட சி.இ.ஓ, இவ்வாறு பிரதிநிதிகளை நியமிப்பது சட்ட விரோதமானது எனக் கூறினார். தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் அவரது பணியை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் ஹண்டியா கிராமத்தின் நிகழ்வு குறித்து கேட்டதற்கு, இது குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை எனவும், உரிய தகவல் கிடைக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:Watch Video: கர்நாடகாவில் கழுத்தளவு நீரில் சடலத்தை தூக்கி சென்ற பொதுமக்கள்