டெல்லி: சீக்கிய மத குருக்களில் ஒருவரான குரு தேக் பகதூரின் 400ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. முகலாய பேரரசர் ஔரங்கசீப் ஆட்சியில் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்ட அவரது பிறந்தநாளில் சீக்கியர்கள் பல்வேறு பகுதிகளிலும் வழிபாடு நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் அமைந்துள்ள சிஸ் கஞ்ச் சாஹிப் குருத்வாராவில் பிரதமர் மோடி இன்று காலை வருகை தந்துள்ளார். அவரை குருத்வாரா நிர்வாகிகள் வரவேற்று சிறப்பித்தனர். இதன் பின்னர் பிரதமர் மோடி, தேக் பகதூரின் 400ஆவது பிறந்தநாளை முன்னிட்டு குருத்வாராவில் வழிபாடு மேற்கொண்டார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு அவர் செல்லும் வழியில் பலத்த பாதுகாப்பு எதுவும் செய்யப்படவில்லை. இதேபோன்று பிரதமருக்கான சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
![பிரதமர் மோடி ட்விட்டர் பதிவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11600405_delhi.png)
அதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தேக் பகதூரின் 400ஆவது பிறந்தநாளை முன்னிட்டு குடிமக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், “400ஆவது பிரகாஷ் புராபின் சிறப்பு நிகழ்ச்சியில், நான் ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜியை வணங்குகிறேன். அவரது தைரியம் மற்றும் நலிந்தவர்களுக்கு சேவை செய்வதற்கான அவரது முயற்சிகளுக்காக அவர் உலகளவில் பரவலாக மதிக்கப்படுகிறார்.
கொடுங்கோன்மைக்கும் அநீதிக்கும் தலைவணங்க அவர் மறுத்துவிட்டார். அவரது உச்ச தியாகம் பலருக்கு பலத்தையும் உந்துதலையும் தருகிறது” எனப் பதிவிட்டிருந்தார்.