ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, "ஊடகங்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வது போல, கங்காரு நீதிமன்றங்களை நடத்துவதை பார்க்க முடிகிறது. இதனால், சில நேரங்களில் அனுபவம் மிக்க நீதிபதிகளுக்கு கூட முடிவெடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
நீதி வழங்குவது தொடர்பான பிரச்சனைகள் குறித்து, ஊடகங்களில் வெளியாகும் தவறான தகவல்கள் மற்றும் விவாதங்கள் ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாக உள்ளன. ஊடகங்கள் தங்களது சமூகப் பொறுப்பை மீறுவதால், ஜனநாயகம் இரண்டு படிகள் பின்னோக்கி தள்ளப்படுகின்றன.
அதேநேரம் அச்சு ஊடகங்கள் தற்போதும் குறிப்பிட்ட அளவில் பொறுப்புடன் செயல்படுகின்றன- டிஜிட்டல் ஊடகங்கள் முற்றிலும் பொறுப்பில்லாமல் செயல்படுகின்றன. அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட நேரடியான மக்கள் சேவையில் உள்ளவர்களுக்கு, அவர்களது பணி காரணமாக ஏற்படும் நெருக்கடிகளை கவனத்தில் கொண்டு ஓய்வு பெற்ற பிறகும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
ஆனால், அதேபோன்ற நெருக்கடிகளிலும், அச்சுறுத்தல்களிலும் இருக்கும் நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. நீதிபதிகள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், எந்தவித பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லாமல் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பள்ளி ஆசிரியர்கள் நியமன ஊழல் - மேற்குவங்க தொழில்துறை அமைச்சர் சட்டர்ஜி கைது!