மத்தியப் பிரதேசம், பர்வானி மாவட்டம், காம்கான் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்திற்காக தூளி கட்டி சுமார் எட்டு கி.மீ தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் இக்கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அவரது குடும்ப உறுப்பினர்களும், கிராமவாசிகளும் இணைந்து மூங்கில் கம்பத்தில் போர்வையால் தூளி ஒன்றைக் கட்டி அருகில் உள்ள ராணி காஜல் கிராமத்திற்கு முதலில் கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்த காணொலி வெளியாகி காண்போரைக் கலங்கவைத்து வருகிறது.
இது புதிதல்ல...
இது குறித்து கவலை தெரிவித்துள்ள காம்கான் கிராம மக்கள், இச்சம்பவம் தங்களுக்கு புதிதல்ல என்றும், ஒவ்வொரு முறையும் எவரேனும் நோய்வாய்ப்பட்டால் அவர்களை இதுபோன்ற துணியால் ஆன தூளியில் அமர்த்தி மாவட்டத்தின் பன்செமல் நகரில் உள்ள சுகாதார மையத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், மழை நாள்களிலும், இரவு நேரங்களிலும் தாங்கள் இதுபோல் இரு மடங்கு அவஸ்தையை அனுபவிக்க வேண்டியுள்ளதாகவும் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
’முதலமைச்சரிடம் முறையிட்டும் பலனில்லை’
பர்வானி மாவட்டத்திலிருந்து இரண்டு எம்.பி.க்கள், அமைச்சர் ஒருவர் என அங்கம் வகித்துள்ள நிலையிலும், இன்றுவரை இக்கிராமத்தில் சாலைகள் அமைக்கப்படாததால், இங்கு ஆம்புலன்ஸ் சேவைகளை அணுக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 15 ஆண்டுகளாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பல தலைவர்களிடம் முறையிட்டு வந்தும் தங்களது பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை என்றும் அக்கிராம மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ராகுல் காந்தியின் டிராக்டர் பேரணி குறித்து டெல்லி போலீசார் விசாரணை