மைசூர்: 1993ஆம் ஆண்டு பாலாறு வனப்பகுதியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 21 போலீசார் உயிரிழந்தனர். வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் திட்டமிட்டு இந்த குண்டுவெடிப்பை நடத்தினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் வீரப்பன் உள்ளிட்ட 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அந்த நால்வரில் ஒருவர் கர்நாடக மாநிலம் ஹனூரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம். இவர் வீரப்பனின் கூட்டாளியும் கூட.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஞானப்பிரகாசத்தின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து, கடந்த 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஞானபிரகாசம்(68) கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், மனிதாபிமான அடிப்படையில் ஞானப்பிரகாசத்திற்கு உச்சநீதிமன்றம் அண்மையில் ஜாமீன் வழங்கியது. அதைத்தொடர்ந்து சாமராஜநகர் நீதிமன்றம் நேற்று(டிச.19) ஜாமீன் வழங்கியது. இதையடுத்து இன்று காலை ஞானப்பிரகாசம் மைசூர் மத்திய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: 'வாரிசு' படம்: சபரிமலையில் பேனர் வைத்து வழிபட்ட ரசிகர்கள்!