உக்ரைன் நாட்டின் சுமி பகுதியிலிருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் 242 பேர் விமானம் மூலம் இன்று காலை டெல்லி வந்தடைந்தனர். உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஆப்பரேஷன் கங்கா என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக சுமி பகுதியிலிருந்து மீட்கப்பட்ட 600க்கும் மேற்பட்டவர்களை இந்தியா கொண்டுவருவதற்காக மூன்று விமானங்கள் போலாந்து சென்றன.
அதன் முதல் விமானம் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தது. இதில், 242 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். விமானத்தில் வந்த தீரஜ் குமார் என்ற மாணவர் பேசுகையில், "சுமியில் நாங்கள் எதிர்பாராத சவால்களைச் சந்தித்தோம். தற்போது அவற்றையெல்லாம் தாண்டி தாய்நாடு திரும்பி பெற்றோரை பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் உயிருடன் நாடு திரும்பியது அதிசயம் போல உள்ளது" எனக் கூறினார்.
மற்றொரு மருத்துவ மாணவியான உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மகிமா ரதி, பங்கரில் சைரன் அடிக்கும் போதெல்லாம் ஒடி ஒளிந்துகொள்ள வேண்டிய அபாய சூழலைத் தாண்டி நாங்கள் வந்துள்ளோம். நாங்கள் கடும் அச்சதுடன் அங்கு காலத்தை கழித்தோம். உயிருடன் பிழைத்து திரும்புவோமா என்றே எங்களுக்கு சந்தேகம் எழுந்தது. தற்போது நாடு திரும்பிய பின்னர்தான் எங்களுக்கு நிம்மதி ஏற்பட்டது எனக் கூறினார்.
இதையும் படிங்க: கழிவு நீர் தொட்டியில் விழுந்து 3 துப்புரவு தொழிலாளர்கள் மரணம்