துலே(மகாராஷ்டிரா): மகாராஷ்டிர மாநிலம், நந்துர்பார் மாவட்டத்தைச்சேர்ந்த விலன் சோமா(40) என்பவர், கண்ணில் உலோகக்கம்பி தாக்கியதால் நந்துர்பாரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது நிலைமை மோசமாக இருந்ததால், அவரை துலேயில் உள்ள சர்வோபச்சார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கும்படி மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அதன்படி, சர்வோபச்சார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விலன் சோமா அனுமதிக்கப்பட்டார்.
முதற்கட்ட பரிசோதனையில் உலோகக்கம்பி மிகவும் ஆழமாக சென்றுள்ளதாகத் தெரியவந்தது. அந்த உலோகப்பட்டை நோயாளியின் கண், மூக்கு மற்றும் தொண்டையையும் பாதித்திருப்பதாக மருத்துவர்கள் கணித்தனர். இதனால் அவருக்கு மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.
இதுதொடர்பாக அங்குள்ள கண் மருத்துவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆலோசித்தனர். பிறகு காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவர்கள் உதவியுடன் சிக்கலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்து நோயாளியின் உடலில் இருந்த உலோகப்பட்டையினை எடுத்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
காரணம் அது உலோகப்பட்டை இல்லை, 6 அங்குல கத்தி. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, விலன் சோமா உயிர் பிழைத்தார். அவரது உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் முக்காரம் கான் தலைமையிலான மருத்துவர்கள் குழுவுக்கு விலன் சோமாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.