டெல்லி: டெல்லியைச் சேர்ந்த பாஜக பெண் செய்தி தொடர்பாளர் ஒருவரின் புகைப்படம் மற்றும் அவதூறான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி டிசிபி அம்ரிதா குகுலோத் தகவல் வெளியிட்டார்.
அதில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 354A (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் 509 (ஒரு பெண்ணை அவமதித்தல்) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 67 (மின்னணு மூலம் ஆபாசமான விஷயங்களை அனுப்புதல்) ஆகியவற்றின் கீழ் புது தில்லி மாவட்டத்தின் சைபர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபாச இணையதளத்தில் அவரது பெயர் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். பாஜக பெண் செய்தித் தொடர்பாளர் அளித்த புகாரில், ஆபாசமான இணையதளத்தின் இணைப்பில் தனது பெயரைப் போட்டு தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த வீடியோக்களுக்கும், அவருக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும், அவருக்கு அவப்பெயர் வாங்கித் தரும் பொருட்டு இந்த போலி வீடியோ வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஃப்ரீ ஃபயர் கேமில் பழக்கம்... மதுரை சிறுமியை மகாராஷ்டிரா கூட்டிச் சென்ற வடமாநில இளைஞர் கைது