டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை எம்பி பினோய் விஸ்வாம் ஈடிவி பார்த்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது அவர், ஜம்மு காஷ்மீரில் தன்னுடைய அரசியல் லாபத்துக்காக பாஜக குறுகிய அரசியல் நடத்துவதாக குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “பாஜக அதிக விலை கொடுத்து குறுகிய அரசியல் நடத்துகிறது. ஜம்மு காஷ்மீரை பெருநிறுவனங்களுக்கும், முதலாளிகளுக்கும் தாரை வார்க்க துடிக்கிறது.
பாஜக-ஆர்எஎஸ்எஸ் ஒரு மோசமான அரசியல் கலவை. அவர்கள் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ நீக்கினார்கள். தற்போது அம்மாநிலத்தின் நிலங்கள் உள்ளிட்ட வளங்களை பறிக்கும் வகையில் நுழைவு வாயிலாக செயல்படுகிறது.
இந்திய வேளாண் துறையை கைப்பற்ற உலகளாவிய பெருநிறுவனங்கள் (கார்ப்பரேட்டுகள்) கவனம் செலுத்தி வருகின்றன. நரேந்திர மோடி அரசாங்கம் அந்த சக்திகளின் இசைவுக்கு ஏற்ப தலையாட்டுகிறது” என்றார்.
தொடர்ந்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் குறித்து கூறுகையில், மூன்று வேளாண் சட்டங்களை கொண்டுவருவதன் பின்னணியில் அரசாங்கத்தின் உண்மையான ஆர்வத்தை விவசாயிகள் புரிந்து கொண்டனர். ஆகவே, சட்டங்களை திரும்பப் பெற அரசாங்கம் கட்டாயப்படுத்தப்படும். விவசாயிகளின் போராட்டம் வெல்லும்” என்றார்.
இதையும் படிங்க : ட்ரீட்டு கொடுங்க அமித் ஷா ஜி - பதிலடி கொடுத்த மம்தா