உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் கோவிட்-19 பெருந்தொற்றால் மேற்கு வங்கத்தில் இதுவரை 287 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 10 பேர் உயிரிழந்தனர்.
நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இதன் தாக்கத்தை தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பர்கனாஸ் வடக்கு, கொல்கத்தா, கிழக்கு மேதினிபூர், ஹவுரா ஆகிய 4 பகுதிகள் சிவப்புக் குறியீட்டுப் பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
மேற்குவங்க மாநிலத்தில் கோவிட்-19 பெருந்தொற்றைக் கண்டறிய போதுமான சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஊரடங்கு உத்தரவு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியான பாஜக குற்றஞ்சாட்டி வருகிறது.
குறிப்பாக, கடந்த 10ஆம் தேதி மசூதியில் தொழுகைக்காக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி நேற்று முன்தினம் (ஏப்ரல் 16) மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் விமர்சனம் முன்வைத்ததை அடுத்து அரசின் மீதான அழுத்தம் மேலும் அதிகரித்தது.
ஊரடங்கு நடவடிக்கைகளை 'நீர்த்துப்போகச் செய்யும்' வகையில் மதக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதை கண்டித்தும், குறிப்பாக இந்த கூடுகைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் மத்திய உள்துறை அமைச்சகம் மாநில தலைமைச் செயலாளருக்கும், காவல்துறைத் தலைவருக்கும் கடிதம் எழுதியது.
இதனையடுத்து, ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த தவறிய (கோபி நகர் மசூதி அமைந்துள்ள) முர்ஷிதாபாத் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் அஜீத் சிங் யாதவ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தின் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக கே.சபரி ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க : ஊரடங்கு அவதி: மக்களின் குறைகளைத் தீர்க்க ஸ்ரீநகரில் அழைப்புதவி மையம்!