கோவிட்-19 ஊரடங்கின் கள நிலவரத்தை ஆராய்ந்து மக்களின் பிரச்னைகளை தீர்க்க பரிந்துரைகளை வழங்க மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்தக் குழு ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் குழுவானது ஊரடங்கு நிலைமைகளை ஆய்வு செய்வதற்காக மேற்கு வங்கம் சென்றது. அம்மாநில சுற்றுப் பயணத்திற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசாங்கம் எவ்வித ஒத்துழைப்பும் அளிக்கவில்லை என இந்தக் குழுவினர் குற்றஞ்சாட்டினர்.
இதனையடுத்து, நேற்று முன்தினம் (ஏப்ரல் 21) மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க அரசிடம் இது தொடர்பாக விளக்கம் கோரியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுக்கு மேற்கு வங்க மாநில தலைமைச் செயலளர் ராஜீவா சின்ஹா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசின் அனைத்து உத்தரவுகளுக்கும் கட்டுப்படுவதாக மேற்கு வங்க அரசாங்கம் உறுதியளித்துள்ளதுடன், மாநிலத்தின் கள நிலைமையை மதிப்பிடும் மத்தியக் குழுவின் ஆய்வு அணிகளுக்கு (ஐ.எம்.சி.டி) முழு ஒத்துழைப்பையும் உறுதி செய்யும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஊரடங்கு கள நிலவரத்தை ஆராய வருகைத் தரும் மத்தியக் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டுமென மேற்கு வங்கம் ஆளுநர் ஜகதீப் தங்கர் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன், அண்மையில் மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்கு மிட்னாபூர், பிஷ்ணுபூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பினரின் விளைவாக என்ன பலன் ஏற்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜகதீப் தங்கர் இடையே மறைமுகமான பனிப்போர் நடத்துவதாக அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : விஜய்யை போல மற்ற நடிகர்களும் உதவ வேண்டும் - புதுச்சேரி முதலமைச்சர்!