உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் தனது கவலையை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், “புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப கட்டணம் வசூலிப்பது துரதிருஷ்டமானது.
இதனை மத்திய - மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப கட்டணம் வசூலிப்பது தொடர்பாக திங்கள்கிழமை (மே 4) சர்ச்சை வெடித்தது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் பணம் கொடுக்க முன்வந்த நிலையில், ஏற்கனவே ரயில் கட்டணத்தில் 85 விழுக்காடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக பாஜக கூறியது.
இந்நிலையில், “புலம்பெயர்ந்தோரின் கட்டணத்தை செலுத்த அரசாங்கங்கள் தயங்கினால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி அளிப்பதில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் தொண்டர்களின் பங்களிப்பு இருக்கும் எனவும் மாயாவதி கூறியுள்ளார்.
இதேபோல் சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, “புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் வகையில் மத்திய அரசு விலையில்லாத ரயில் கட்டணத்தை அளிக்க முன்வர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். பல மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்களும் இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: வரலாறு நெடுக தொடரும் அறிவியல் மறுப்பென்னும் மாபெரும் தொற்று நோய்!