பாலின ரீதியாக ஒடுக்கப்படும் திருநங்கை சமூகத்திற்கு எதிரான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், உயரடுக்கு துணை ராணுவப் படைகளில் திருநங்கைகளைச் சேர்க்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக கடந்த மாதம் அறிவித்திருந்தது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம்,"மத்திய ஆயுத காவல் படைகள் தேர்வு 2020 - வரைவு விதிகள் தொடர்பான கருத்துகள்" என்ற தலைப்பில் ஜூலை 1ஆம் தேதி சி.ஆர்.பி.எஃப்., ஐ.டி.பி.பி., எஸ்.எஸ்.பி., மற்றும் சி.ஐ.எஸ்.எஃப்., ஆகிய ராணுவ உயரடுக்கு துணைப்படைகளின் தலைமைகளுக்கு எழுதிய கடிதத்தில் மூன்றாம் பாலினத்தவர்களை அலுவலர்களாக, உதவித் தளபதிகளாக நியமிப்பதற்கான நடைமுறைகள் குறித்து அனைத்து ஆலோசனைகளையும் கருத்துகளையும் தெரிவிக்க கோரியிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த இந்தோ-திபெத்திய எல்லை காவல் துறை (Indo-Tibetan Border Police -ITBP) மற்றும் எல்லை பாதுகாப்புப் படை (Border Security Force (BSF)) தலைமை இயக்குநர் எஸ்.எஸ்.தேஸ்வால், "திருநங்கைகளும் மனிதர்கள் தான். அவர்கள் மரியாதைக்குரிய வாழ்க்கை வாழ்வதற்கான வேலை வாய்ப்புகளையும் பெற வேண்டும். அதற்கான நல்ல தொடக்கமாக இந்த முடிவு இருக்கும்" எனக் கூறினர்.
ஜனவரி 10, 2020 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) 2019 சட்டத்தின் 14ஆவது பிரிவின்படி, திருநங்கைகளுக்கு கல்வி நிறுவன சேர்க்கைகளில் அனைத்து வகையான இட ஒதுக்கீடு உரிமைகளும் உண்டு.
மேலும், அரசு வேலைகளுக்குச் சட்டத்தின் 9ஆவது பிரிவின்படி, எந்தவொரு திருநங்கைக்கும் வேலைவாய்ப்புத் தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் எந்தவொரு நிறுவனமும் பாகுபாடு காட்டக் கூடாது. இந்தச் சட்டம் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் வேலையில் பிற தொடர்புடைய பிரச்னைகளுக்கும் பொருந்தும் என்பது கவனிக்கத்தக்கது.