இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் டெல்லி நிஜாமுதீனில் மாநாடு ஒன்றை நடத்தியுள்ளனர். இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இஸ்லாமிய மக்கள் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்து தங்கள் மாநிலங்களுக்குச் சென்றவர்களுக்கு கரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பிடாரி கிராம மக்கள், நாட்டில் கரோனா வைரஸ் பரவுவதற்கு இஸ்லாமியர்களே காரணம் எனக் குற்றம் சாட்டி மூன்று இஸ்லாமிய ஆண்களைத் தக்கியுள்ளனர். அப்போது அவர்கள் தாங்கள் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை எனக் கூறியுள்ளனர். இருப்பினும் அதனைப் பொருட்படுத்தாமல் மக்கள் அவர்களைத் தாக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக முடோல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் லோகேஷ் ஜகசலார் கூறுகையில், 'இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்களை அடித்து துன்புறுத்தியவர்கள் யார் என தேடிவருகிறோம். இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இதையும் படிங்க : விதிகளை மீறியதாக இந்தோனேசியர்களுக்கு எதிராக வழக்கு