ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்த சுபஹானி கஜா மொய்தீன், பல நாச வேலைகளில் நேரடியாக ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இவர் நான்கு வருடங்களுக்கு முன்பு ஈராக் நாட்டிற்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டபோது தேசிய புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
கிடைத்த தகவலின்படி, கஜா மொய்தீன் துருக்கி வழியாக சட்டவிரோதமாக ஈராக்கிற்குள் நுழைந்து மொசூலில் இருந்து ஈராக்கிற்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இவரை கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இவ்வழக்கு தொடர்பாக முன்னாள் இந்திய தூதரக அலுவலர் உள்பட 46 பேரின் சாட்சிகளை நீதிமன்றம் விசாரித்தது.
இந்நிலையில் நேற்று (செப். 28), இவ்வழக்கு விசாரணை கொச்சியில் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் வந்தது. அப்போது பேசிய நீதிபதி, அனைத்து சாட்சிகளையும் விசாரித்ததின் அடிப்படையில் கஜா மொய்தீன் பயங்கரவாத நடவடிக்கையில் நேரடியாக ஈடுபட்டதும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்களை உபயோகித்ததும் உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, மொய்தீன் வாழ்நாள் முழுவதும் சிறையிலிருக்கும்படி ஆயுள் தண்டனையும், இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், இவ்வழக்கை திறமையாக கையாண்ட என்ஐஏ அலுவலர்களுக்கு தனது பாராட்டுகளை நீதிபதி தெரிவித்தார்.