கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் திட்டமிட்டபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான நேற்று (செப்.16) மாநிலங்களவையின் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி பதிலளித்தார்.
அதில், " ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பிகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகள் மிகத் தீவிரமாக இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை தகவல் அளித்துள்ளது.
தீவிரவாத செயல்பாடுகளுக்கு ஆதரவை திரட்டும் வகையில் பரப்புரை செய்ய சமூக ஊடகத் தளங்களை பயன்படுத்துவதால், அவை தொடர்ந்து கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளன. தீவிரமாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு முடிவெடுத்து, அதற்குரிய பணிகளை செய்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு உரிமை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கே தீவிரவாத நடவடிக்கைகள் குறைந்துள்ளன. தீவிரவாதிகளால் கடந்த 2019ஆம் ஆண்டில் 202 பேர் உயிரிழந்துள்ளனர். 2010ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் பெருமளவு குறைந்துள்ளது.
தீவிரவாதம் (மாவோயிஸ்ட்கள்) தொடர்பான வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக பல்முனை அணுகுதலை கொண்ட தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தை 2015ஆம் ஆண்டில் மத்திய அரசு செயல்படுத்தியதே இதற்கு காரணம்.
கர்நாடகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இருந்து கூடுதல் ரிசர்வ் படைகளை நிலைநிறுத்த வேண்டும் என கோரிக்கைகள் வந்துள்ளன.
குற்றச் சட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை பரிந்துரைப்பதற்காக டெல்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழக துணை வேந்தரின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூடுதல் ஆலோசனைகளை வழங்க மாநில அரசுகளிடம் உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது" என கூறப்பட்டுள்ளது.