அமெரிக்காவின் பானமாவுக்கு சொந்தமான 'தி நியூ டைமண்ட்' என்ற கப்பல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்காக 2.60 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு குவைத்தின் மினா அல் அஹ்மதி துறைமுகத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் புறப்பட்டது.
இந்தக் கப்பல் இன்று(செப். 5) ஒடிசாவிலுள்ள பரதீப் துறைமுகத்திற்கு வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால், நேற்று முன்தினம் இலங்கை அம்பாறை சங்கமன்கந்தை பகுதியின் கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் வந்துகொண்டிருந்தபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
தீவிபத்து இலங்கையின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் ஏற்பட்டதால், தீ விபத்து குறித்து இலங்கைக் கடற்படைக்கு தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு விரைந்துவந்த இலங்கைக் கடற்படையினர் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அக்கப்பலிலிருந்து 20க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்திய அரசு சார்பிலும் தீயை அணைக்க இரண்டு கப்பல்கள் அனுப்பப்பட்டது. முதல்கட்டமாக தி நியூ டைமண்ட் கப்பல் இலங்கையின் பிரத்யேக பொருளாதார மண்டத்தில் இருந்து வெளியே பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
கடும் போராட்டத்திற்கு பின்னர் கப்பலில் ஏற்பட்ட தீ நேற்று(வெள்ளிக்கிழமை) அணைக்கப்பட்டது. இது குறித்து இந்திய கடற்படை அலுவலர் கூறுகையில், "எஞ்சின் அறையிலேயே தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பிரதான எரிபொருள் டாங்கு வரை தீ பரவவில்லை. மேலும், சரக்குகள் சேமிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் தீ பரவவில்லை.
இருப்பினும், கப்பலில் சுமார் 2 மீட்டர் வரை விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசல் விரிவடைந்தால், அது கப்பலின் நிலைதன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும். இப்போது வரை அந்த விரிசல் விரிவடையவில்லை. அதைத் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம்" என்றார்.
இந்த நியூ டைமண்ட் கப்பலில் 2 மில்லியன் பேரல்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் டன் அளவுக்கு கச்சா எண்ணெய் உள்ளது. இந்த அளவுக்கு கச்சா எண்ணெய் கடலில் கலக்குமானால், அது கடற்பகுதியில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்றும், அத்துறைசார்ந்த வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ரஷ்யாவின் தடுப்பு மருந்து பாதுகாப்பானது!