இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கும் கேரளா, கோவையைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் டிஎஸ்பி விக்ரம் தலைமையில் கடந்த 12ஆம் தேதி ஐஎஸ் ஆதரவாளர்கள் என்ற அடிப்படையில் உக்கடம் முகமது அசாருதீன்(32), போத்தனூர் திருமறை நகரை சேர்ந்த அக்ரம் ஜிந்தா(26), தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த ஷேக் இதாயத்துல்லா(38), குனியமுத்தூரைச் சேர்ந்த அபுபக்கர்(29), போத்தனூர் உமர் நகரை சேர்ந்த சதாம் உசேன்(26), தெற்கு உக்கடத்தை சேர்ந்த இப்ராஹிம் என்ற ஷாகிம்ஷா(28) ஆகிய 6 பேரின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.
இதன் இறுதியில் முகமது அசாருதீன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மற்ற ஐந்து பேரை கொச்சி தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலகத்தில் வைத்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், விசாரிக்கப்பட்டு வந்த ஷேக் இதாயத்துல்லாவுக்கு ஸ்டூடண்ட் இஸ்லாமிக் மூவ்மென்ட் ஆப் இந்தியா (சிமி) அமைப்புடன் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தனர். அதனையடுத்து அவரை நேற்றிரவு கோவையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் கைது செய்தனர்.