மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அந்த மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாடுகளும் அதிகரித்துள்ளன.
இது குறித்த வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், "டெல்லி, தமிழ்நாடு, மாகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கரோனா நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சையளிக்கப்படுவதில்லை. நோயாளிகள் விலங்குகளைவிட மோசமாக நடத்தப்படுகின்றனர்.
உயிரிழக்கும் நோயாளிகளை முறையாக அப்புறப்படுத்தக்கூட யாரும் இருப்பதில்லை. சமீபத்தில் உயிரிழந்தவரின் உடல் அருகிலுள்ள குப்பைத்தொட்டியில் கிடந்தது அதிர்ச்சியளிக்கிறது. குறிப்பாக, டெல்லியில் நிலை கொடூரமானதாகவும் பரிதாபகரமானதாவும் உள்ளது" என்று காட்டமாக விமர்சித்தனர்.
உச்ச நீதிமனறத்தின் விமர்சனத்தைத் தொடர்ந்து உள் துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து இரண்டு உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தினார். மேலும், திங்கள்கிழமை தேசிய தலைநகர் பகுதியுள்ள அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்நிலையில், அமித் ஷா நேற்று திடீரென்று லோக் நாயக் ஜே பிரகாஷ் நாராயண் மருத்துவனையில் ஆய்வை மேற்கொண்டார். அப்போது, "மருத்துவமனைகளிலுள்ள உணவகங்கள் சில காரணங்களால் மூடப்பட்டாலும், நோயாளிகளுக்கு உணவுகள் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதை உறுதி செய்ய மாற்று உணவகங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்" என்று அவர் உத்தவிட்டார்.
மேலும், மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் தேவையான மனநல ஆலோசகனைகள் வழங்கவும் அறிவுறுத்தினார். இதன் மூலம் அவர்கள் உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியாகவும் சரியான நிலையில் இருப்பது உறுதி செய்யப்படும் என்றார்.
இதுதவிர மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்களையும் பொருத்த டெல்லி சுகாதாரத் துறை செயலருக்கு அமித் ஷா உத்தவிட்டுள்ளார். அதன்படி அடுத்த 24 மணி நேரத்தில் டெல்லியுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த பொதுபணித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குஜராத் மாடல் அம்பலமாகியுள்ளது - ராகுல் காந்தி