இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஊடகவியலாளர் வினோத் துவா. அவர் யூடியூப் தளத்தின் மூலமாக அரசியல் காணொலிகளை வெளியிட்டு வந்ததாக அறியமுடிகிறது.
'தி வினோத் துவா ஷோ' என்ற பெயரில் மத்திய அரசை விமர்சித்து அவர் வெளியிட்ட காணொலிகள் அங்கு மிகுந்த பிரபலமான ஒன்றாக கருதப்படுகிறது. இதனையடுத்து, உண்மைக்கு மாறான கருத்துகளை வெளியிட்டு, சமூகத்தில் வெறுப்புணர்வைத் தூண்டி அமைதி மற்றும் வகுப்புவாத ஒற்றுமையை குலைக்க முயன்றதாக கூறி அவர் மீது சிம்லா காவல்துறையினர் தேச துரோக வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், தன் மீது புனையப்பட்ட தேச துரோக வழக்கில் தான் கைது செய்யப்படால் இருப்பதை உறுதி செய்ய இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் வினோத் துவா இடைக்கால பிணையை பெற்றார். இருப்பினும், இந்த வழக்கு தொடர்பில் ஏற்பட்ட அழுத்தங்கள் காரணமாக காவல்துறையினர் அவரை மீண்டும் கைது செய்ய முயன்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஊடகவியலாளர் துவா தன் மீது தொடரப்பட்ட தேச துரோக வழக்கை ரத்து செய்யக்கோரி உச்ச நீநிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி உதய் உமேஷ் லலித் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு இன்று (ஆகஸ்ட் 5) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
ஊடகவியலாளர் துவா மீது தேச துரோக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தற்கான காரணங்கள் அறிக்கையாக இமாச்சல பிரதேச காவல்துறையினர் சார்பில் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
இந்த விசாரணையின்போது, மனுதாரர் துவாவுக்காக ஆஜரான மூத்த வழக்குரைஞரும், அரசின் முன்னாள் கூடுதல் தலைமை வழக்குரைஞருமான (ஏ.எஸ்.ஜி) விகாஸ் சிங், "உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முந்தைய அறிக்கையின்படி, குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒரு ஊடகவியலாளர். அவர் ஊடகவியலாளராக இருப்பதால் பேச்சு சுதந்திரம் மற்றும் அரசை விமர்சிக்க உரிமை உண்டு. இந்த வழக்கு அச்சுறுத்துவதற்காக தொடுக்கப்பட்ட வழக்கு. இதை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்" என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பான இறுதிக்கட்ட விசாரணையை ஆகஸ்ட் 10ஆம் தேதி மதியம் 2 மணிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டது.