உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்ததுள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வரும் 26ஆம் தேதி அந்த அமைப்பின் தொண்டர்களுக்காக உரையாற்றுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில், “தலைவர் மோகன் பகவத் ஏப்ரல் 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு 'நடப்புச் சூழலில் நமது பங்கு' என்னும் தலைப்பில் உரையாற்றுவார். இந்த அமர்வில் நீங்கள் அனைவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், நலம் விரும்பிகளுடன் இணைய வேண்டும்” எனப் பதிவிடப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் உரையானது, இந்த நெருக்கடி நிலையிலிருந்து வெளிவருவதற்கான வழியைப் பரிந்துரைப்பதாக அமையும் என்றும் அதே நேரத்தில் இந்த நெருக்கடிக்குப் பின்னர் என்ன மாற்றங்கள் தேவைப்படும் என்றும் அலசி ஆராயப்படும் என அந்த அமைப்பின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் மரபுப்படி, அதன் தலைமையை வகிக்கும் தலைவர்கள் யாராக இருந்தாலும் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே அதன் உறுப்பினர்களிடையே தோன்றி உரையாற்றுவர். அதாவது, விஜயதசமி விழா, ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆண்டுப் பயிற்சி அமர்வின் இறுதி என இந்த இரு தருணங்களில் மட்டுமே பொதுவில் அதன் தலைவர்கள் உரையாற்றுவர்.
ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் வரலாற்றில் முதல்முறையாக அதன் தலைவர், மரபிற்கு மாறாக மெய்நிகர் தளத்தில் உரையை நிகழ்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மருத்துவர்களுடன் அமித் ஷா கலந்தாய்வு : போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்த மருத்துவர் சங்கம்!