நாட்டின் உள்ள பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் பிரச்னை பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிய பெரும் தொழிலதிபர்கள் கடனை திருப்பித்தராமல் மோசடி செய்வது சில வருடங்களாக அதிகரித்துவருகிறது. வங்கிகளின் வாராக் கடன் விவரமும், இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி அதைத் திருப்பி செலுத்தாதவர்களின் விவரங்களையும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
அதற்கு நீதிமன்றத்தில் பதிலளித்த ரிசர்வ் வங்கி, சட்டபிரிவுகளின்படி இது போன்ற ரகசியமாக விவரங்களை வெளியிடமுடியாது. இது ரிசர்வ் வங்கியின் கொள்கைமுடிவு என தெரிவித்தது.
ரிசர்வ் வங்கியின் இந்த பதில் குறித்து நேற்று கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், ரிசர்வ் வங்கியின் பதில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை மீறும் விதமாக உள்ளதாகவும், ரிசர்வ் வங்கியின் பதில் நீதிமன்ற அவமதிப்பு எனவும் கண்டனம் தெரிவித்தது. மேலும்,வாராக் கடன் குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி விரைந்து தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இம்முடிவால் தனது சட்டப்பிரிவை நீக்கி நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தவுள்ளதாக ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.