கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் வேறு மாநிலத்திற்கு உரிய அனுமதியுடன் விமானத்தில் பயணிக்க சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கான ரயில் சேவை கரோனா அச்சத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சமீபத்தில் இந்திய ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், " பயணிகள் அனைவரும் 2020 ஏப்ரல் 14ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து ரயில் டிக்கெட்டுகளையும் ரத்து செய்ய வேண்டும். அந்த கட்டணம் முழுவதுமாக திரும்பத்தரப்படும்" எனக் குறிப்பிட்டிருந்தது.
இதையடுத்து, பயணிகள் ரயில்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இயக்கப்படாது என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளது. இதனால், மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டது.
இந்நிலையில், தற்போது இந்திய ரயில்வே தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், “ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கும் பயணிகள் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. பயணிகள் ரயில்கள் ஆகஸ்ட் வரை இயக்கப்படாது என பரவும் தகவல் வதந்தி. சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. விரைவில் சுகாதார அமைச்சகம், உள்துறை அமைச்சகம் உயர் அலுவலர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.