புதுச்சேரியில் ஊரடங்கின் போது மளிகை கடை விற்பனையாளர்கள், வியாபார நிறுவனங்கள் அத்தியாவசியப் பொருள்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்து வருவதாக குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அலுவலகத்திற்கு புகார் வந்துள்ளது.
இதனையடுத்து, புதுச்சேரி ரங்கப் பிள்ளை வீதி, பாரதி வீதி, நேரு வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அத்தியாவசிய பொருள்கள் விற்பனை நடைபெறும் கடைகள் மற்றும் மார்க்கெட் பகுதிகளைக் கூட்டுறவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் கந்தசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கடைகாரரிடம் அதிக விலைக்கு பொருள்கள் விற்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடைகள் மீது புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கடை உரிமையாளரிடம் வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "புதுச்சேரியில் 15 லட்சம் மக்கள் உள்ளனர். இவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் குறித்த விலைப்பட்டியலை கடை முன்பு வைக்கவேண்டும்.
ஊரடங்கைப் பயன்படுத்தி விலையை உயர்த்தி விற்கக் கூடாது. அத்தியாவசிய பொருட்களை வியாபாரிகள் பதுக்கல் கூடாது. அரசு விதிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தார்.
இதையும் படிங்க: பூவிருந்தவல்லியில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் நுழைவு வாயில்