கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தத் தேவையான நிதியை அரசுக்கு வழங்குமாறு முதலமைச்சர் நாராயணசாமி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு கவசங்கள், என்95 முகக் கவசங்கள், உடல் வெப்பநிலை கண்டறியும் கருவிகள் ஆகியவற்றை கல்ஸ் குழுமம் வழங்கியது.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையிலுள்ள தனிமைப்படுத்த வார்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு, இந்தப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. இந்தநிலையில், பாதுகாப்பு உபகரணங்களை முதலமைச்சரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது.
அப்போது தனியார் நிறுவனம் வழங்கிய பாதுகாப்பு உபகரணங்களை முதலமைச்சர் நாராயணசாமி பெற்றுக்கொண்டார். பின்னர், அதனை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் முன்னிலையில், முதலமைச்சர் சுகாதாரத் துறைக்கு வழங்கினார். மாவட்ட ஆட்சியர் அருண், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க...கரோனாவால் மூடப்பட்ட வங்கி...!