எழுத்துலகவாசிகளால் கி.ரா என அன்போடு அழைக்கப்படும் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள இடைசெவல் கிராமத்தில் 1922ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி பிறந்தார்.
கரிசல் இலக்கியத்தின் முன்னோடி எனப் போற்றப்படுகிற இவர், 1958ஆம் ஆண்டு தனது சரஸ்வதி இதழ் மூலம் எழுத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். ஏழாம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ள இவர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராக பணியாற்றும் நிலையை அடைந்தார். அதற்கு காரணம் அவரது எழுத்து.
சாகித்ய அகாடமி, இலக்கிய சிந்தனையாளர் விருது என பல விருதுகளை பெற்று எழுத்துலகின் அனைத்து உச்சங்களையும் தொட்ட அவர், இன்று (செப்டம்பர் 16) 98ஆவது பிறந்த நாள் கொண்டாடுகிறார். புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்துவரும் கி. ராஜநாராயணனை முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இன்று அவரது 98ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன், நடிகர் சிவக்குமார் உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர். 98 வயதிலும் எழுத்து மற்றும் வாசிப்பின் மீதான ஆர்வம் குன்றிராத அவர், கரோனா ஊரடங்கு காலத்தில் பாலுறவு குறித்த தனது கையெழுத்தில் புத்தகம் ஒன்று எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.