ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி காங்கிரஸ் கட்சியினர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி மீது வழக்கு தொடர்ந்தனர். இதில் எந்தவித ஊழலும் நடைபெறவில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ராகுல் காந்தி வழக்கம்போல் பிரதமர் மீது குற்றம் சாட்டி பொய்யாகத் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.
மேலும், மக்கள் மத்தியில் பிரதமர் குறித்து தவறான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இதனைக் கண்டித்து புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் தலைமையில் இன்று வணிக வரித்துறை அலுவலகம் எதிரே பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் புதுச்சேரி பாஜக நிர்வாகிகள் ஏம்பலம் செல்வம், சாய் சரவணன் கணபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு ராகுல் காந்திக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.