டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர்களுக்கான 69,000 காலியிடங்களில் சேர ஆர்வமுள்ளவர்களை காணொலி காட்சி வாயிலாகச் சந்தித்து, இவ்விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தங்களுடன் இருக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உறுதியளித்துள்ளார்.
"கடினமாக உழைக்கும் இளைஞர்களுக்கு அநீதி செய்யக்கூடாது. மாநில அரசால் அவர்களுக்கு நீதி வழங்க முடியாவிட்டால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்" என்று பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.
மத்திய பிரதேசத்தில் வியாபம் முறைகேட்டில் 2007ஆம் ஆண்டில் நுழைவுத் தேர்வு, அரசுப் பணியாளர் நியமனத்தில் 2,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சூழலில், உத்தரப் பிரதேசத்தில் அரசு பணியாளர்களுக்கான தேர்வு கடந்தாண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது.
அதன் முடிவுகள் இந்தாண்டு மே 12ஆம் தேதி வெளியானது. இதன் அடிப்படையில் 69,000 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில் முறைகேடு நடந்திருப்பதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் தவறு நடந்திருப்பதாக கூறிய அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜூன் 3ஆம் தேதி இந்த பணி நியமனத்தை நிறுத்தி வைத்தது.
மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்பு 45 விழுக்காடாக இருந்த பொதுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண் 40 விழுக்காடு குறைக்கப்பட்டது ஏன்? எதன் அடிப்படையில் இந்த பணி நியமனம் நடைபெற்றது என்பது குறித்து மாநில அரசு மே 21ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.
இவ்வேளையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா ஜூன் 8ஆம் தேதி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “இந்த பணி நியமனத்தில் உண்மையில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. ஊழலில் தொடர்புடையதாக டைரியில் பெயர் இடம் பெற்றுள்ள மாணவர்கள், பண பரிவர்த்தனை, தேர்வு மையங்களில் உள்ள வேறுபாடுகள் ஆகியவற்றுக்கும் இதற்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. 69,000 ஆசிரியர்கள் பணி நியமனம் உபி.யின் வியாபம் ஊழல்’’ என்று கூறியுள்ளார்.