டெல்லி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர். இவர்களுடன் மத்திய அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்தன.

இந்நிலையில், குடியரசு நாளன்று விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை ஏற்படவே சில அமைப்புகள் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தன.
தற்போது போராடிவரும் விவசாயிகளைத் தடுக்கும்பொருட்டு காவலர்கள் கூரிய முள்கள், முள் வேலிகள், உள்ளிட்ட பல தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். அரசின் இந்தச் செயல் உலகெங்கிலும் உள்ளோரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இந்நிலையில், குடிநீர், இணையதள சேவை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள விவசாயிகளைச் சந்திக்க முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் பாதல் ஒருங்கிணைப்பில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எம்பிக்கள் காசிப்பூர் நோக்கிச் சென்றனர்.
இதற்கிடையில், போராட்டக் களத்திற்கு வந்த கனிமொழி, திருச்சி சிவா, சு. வெங்கடேசன், திருமாவளவன், ரவிக்குமார் உள்ளிட்ட தமிழ்நாடு எம்பிக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.